உருண்டு வந்தாலும் வெறுப்பு குறையாது.. அண்ணாமலைக்கு அழகிரி பதிலடி..!
உருண்டு வந்தாலும் வெறுப்பு குறையாது.. அண்ணாமலைக்கு அழகிரி பதிலடி..!
“அண்ணாமலை பாதயாத்திரை நடத்தினாலும், அல்லது கன்னியாகுமரியில் இருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு கடுகளவும் குறையாது” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பால், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், உடுத்தும் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
மறைமுக வரியான ஜி.எஸ்.டி.யை உயர்த்துவதால் நேரடியாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், கார்ப்பரேட்டுகள் நலனில் அக்கறையுள்ள மோடி அரசு வருமான வரியையோ, கார்ப்பரேட் வரியையோ இதுவரை உயர்த்தாமல் அதற்கு மாறாக சலுகைகளை அளித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. திமுக நிறைவேற்றாத கோரிக்கைகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து கோபாலபுரத்திற்கு பாதயாத்திரை நடத்தப் போவதாக அண்ணாமலை கூறுகிறார்.
அண்ணாமலை பாதயாத்திரை நடத்தினாலோ, அல்லது கன்னியாகுமரியில் இருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு கடுகளவும் குறையாது.
எனவே, தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.