அதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.. போட்டுத் தாக்கும் வானதி..!

அதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.. போட்டுத் தாக்கும் வானதி..!

Update: 2022-05-26 11:14 GMT

“தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன் வரவில்லை. மத்திய அரசை குறை சொல்வதில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் குறியாக இருக்கிறார்” என, வானதி சீனிவாசன் கூறினார்.

பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது.


இப்போது, மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, மீண்டும் விலையை குறைத்துள்ளது. நவம்பரில் விலையை குறைத்த போதே தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்தது. ஆனால், மாநில அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

இப்போது பெட்ரோலுக்கு எட்டு ரூபாயும், டீசலுக்கு ஆறு ரூபாயும் குறைத்து இருப்பதோடு, கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதை பின்பற்றி கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. ஆனால், தமிழகத்தின் நிதி அமைச்சர் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாட்டோம் என அடம் பிடிக்கிறார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த விலை குறைப்பால் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது மீண்டும் விலையை குறைத்து இருப்பதால், ஆண்டுக்கு 2.20 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், 3000 கோடி ரூபாய்க்கு மேல் பெட்ரோல், டீசல் மூலம் வரியை பெற்று வரும் தமிழக அரசு விலையை குறைக்க முன் வரவில்லை. மத்திய அரசை குறை சொல்வதில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் குறியாக இருக்கிறார்.

திமுக அரசு தங்கள் அரசியல் சுயநலத்துக்காக கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வில்லை என்றால் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவது என பாஜக மாநில தலைமை முடிவு எடுத்துள்ளது” என்று அவர் கூறினார்.

Similar News