குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்க 34 லட்சம் பேர் தேர்வு ..?

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்க 34 லட்சம் பேர் தேர்வு ..?

Update: 2022-07-07 16:12 GMT

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதனிடையே 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ. 25,800 கோடி செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். இந்த நிலையில்தான் சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ்நாடு அரசு, பொங்கல் பரிசு, கொரோனா நிவாரணம் போன்ற சிறப்பு திட்டங்களை, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குகிறது. அதில் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், சொந்த வீடு வைத்திருப்போர் என 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை, அனைத்து அரிசி அட்டைதாரர்களும் வழங்க முடியாது.

ஸ்மார்ட் கார்டு, ஆதார் எண் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்திலும் முதியோர் உதவி தொகை, விவசாய நிதியுதவி என மத்திய, மாநில அரசு திட்டங்களை பெறும் பயனாளிகள், ஏழ்மையில் உள்ளவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மத்திய அரசு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு ஆய்வுக்கு பயனாளிகளை தேர்வு செய்கிறது.

தமிழ்நாட்டில், 34.51 லட்சம் இலவச சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். எனவே, குடும்ப தலைவிக்கு மாதம், ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வில் முதல் கட்டமாக, இலவச எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்களை சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மொத்த பயனாளிகளும் அடையாளம் காணப்பட்ட பின், உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

Similar News