டெல்லியில் கனமழை.. விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி..!
டெல்லியில் கனமழை.. விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி..!
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனிடையே, டெல்லியில் மணிக்கு 60 முதல் 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, டெல்லியில் இன்று திடீரென வானிலை மாற்றமடைந்து அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கனமழையால் டெல்லியில் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அத்துடன், சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் கால தாமதமாக புறப்படும் எனவும், தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் தாமதமாக தரையிறங்கியதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லக்கூடிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நிலவும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எந்தவித முன் அறிவிப்பும் இன்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.