கிராமப்புற மக்களுக்கு உதவி.. நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு..!
கிராமப்புற மக்களுக்கு உதவி.. நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு..!
கிராமங்களில் உள்ள மக்களின் வருவாயை அதிகரிக்க கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாகக் கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு உதவுமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் மொத்தம் 43 பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRB) உள்ளன. இந்த வங்கிகளில் மூன்றில் ஒரு பங்கு, குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள வங்கிகள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இவற்றின் மூலதனத் தேவையை பூர்த்தி செய்ய அதிக நிதி தேவைப்படுகிறது. இந்த வங்கிகள் RRB சட்டம், 1976 இன் கீழ் உருவாக்கப்பட்டு, சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்களுக்கு கடன் மற்றும் இதர வசதிகளை வழங்குகிறது.
இவற்றை மேம்படுத்த அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றின் வாயிலாக கிராமப்புற மக்களுக்கு அதிக உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்திற்கு பிறகு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா கூறுகையில், “கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை நிதியமைச்சர் மதிப்பாய்வு செய்து, இந்தத் துறைக்கு நிறுவனக் கடன்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விவாதித்துள்ளார்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் மீன்பிடி மற்றும் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.