கொலையில் முடிந்தது ஹோலி.. இரு தரப்பினர் மோதல்.. 4 பேர் பலி..!

கொலையில் முடிந்தது ஹோலி.. இரு தரப்பினர் மோதல்.. 4 பேர் பலி..!

Update: 2022-03-19 15:14 GMT

நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இரு வேறு இடங்களில் நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டம் ஜார்ஜ் டவுன் பகுதியில் நேற்று ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, மது போதையில் இருந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராகுல் சொன்கர் (25), சஞ்சய் (35) ஆகிய இருவர் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டனர்.

அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டம் ஷொப்ஹசர் பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஒரு தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு குத்தியதில் ஷியாம் (23), ஹிரித்ஹரி (30) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News