கொடூரம்! 8 மாத கர்ப்பிணி மகளை அடித்துக் கொன்ற பெற்றோர்!!
கொடூரம்! 8 மாத கர்ப்பிணி மகளை அடித்துக் கொன்ற பெற்றோர்!!
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் காதலனால் உருவான கருவை கலைக்கச் சொல்லி பெற்றோர் 8 மாத கர்ப்பிணி மகளை அடித்து கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு - பவானி தம்பதியின் மகள் ஷர்மிளா (26) தனது தூரத்து சொந்தமான கலைராஜன் என்பவரை சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதற்கு ஷர்மிளாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் ஷர்மிளா 2008இல் வீட்டை விட்டு வெளியேறி கலைராஜனை திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். சில நாட்கள் கழித்து ஷர்மிளாவை தேடி பிடித்த அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அரியலூருக்கு அழைத்து சென்றுவிட்டனர்.
பின்னர் ஷர்மிளாவை உறவுக்காரரான அன்புமணிக்கு 2009இல் திருமணம் செய்து வைத்தனர். அன்புமணியுடன் வாழ்ந்து வந்த ஷர்மிளா ஆண் குழந்தைக்கு தாயானார். ஆனாலும் காதலனை மறக்கமுடியாத ஷர்மிளா குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு காதலன் கலைராஜனுடன் வாழ சென்னைக்கு வந்துவிட்டார்.
சென்னையில் கலைராஜனுடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்து வந்த ஷர்மிளா கருவுற்றார். 2018ஆம் ஆண்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஷர்மிளா முதல் மகனை பார்க்க அரியலூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஷர்மிளாவின் பெற்றோர் திட்டமிட்டு அவரை அரியலூருக்கு அழைத்து வந்தார்கள் என மற்றொரு தரப்பு கூறுகிறது.
இந்நிலையில், அரியலூருக்கு வந்த ஷர்மிளாவிடம், கலைராஜனால் உருவான கருவை கலைக்குமாறும், கலைராஜன் ஒரு வகையில் உனக்கு அண்ணன் முறை என்பதால் இந்த திருமணத்தை ஏற்க முடியாது எனவும் ஷர்மிளாவிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
ஆனால், ஷர்மிளா அதற்கு ஒத்துக் கொள்ளாததால், ஆத்திரமடைந்த தந்தை தங்கராசு மற்றும் உறவினர்கள் நான்கு பேர் சேர்ந்து ஷர்மிளாவை தலை,வாய், முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். மேலும், தடயத்தை கலைத்துவிட்டு ஷர்மிளா தூக்கு போட்டுக்கொண்டார் என்றும் போலீசில் நாடகமாடினர்.
விசாரணையில் அனைத்து நாடகமும் அம்பலமான நிலையில் தங்கராசு உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in