முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். கடந்த 3 நாட்களாக தனிமைப்படுத்தி கொண்டு இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று திடீரென சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.

முதலில் சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக சென்றதாக கூறப்பட்டது. பின்னர் அவருக்கு தொண்டை மற்றும் உடல் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகலில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். 

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருந்ததாவது, கொரோனா அறிகுறிகளுக்கான பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறியிருந்தார்.

மேலும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் பெரியளவில் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு பாதிப்பு இல்லையென்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்றதாக மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in