மதங்களை கடந்த மனித நேயம்.. சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்..!
மதங்களை கடந்த மனித நேயம்.. சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே நெடுவாசல் கிராமத்தில் பழமை வாய்ந்த மங்கள நாயகி அம்பாள் உடனுறை பாலாண்ட ஈஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருப்பணிகள் முடிந்து இன்று (17-ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள பல்வேறு கிராம மக்கள் நாட்டியக் குதிரை ஆட்டங்கள், செண்டை மேளங்கள் முழங்க கண்கவர் வாணவேடிக்கையுடன் நெடுவாசல் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன்போது, மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆவணம் மற்றும் காசிம்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தட்டுகளை கையில் ஏந்தியபடி நெடுவாசல் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
அவர்களை, நெடுவாசல் கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர், இஸ்லாமியர்கள் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்கள் மற்றும் பணத்தை விழாக்குழுவினர் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக, இப்பகுதி கிராமங்களில் உள்ள இந்து கோவில்களின் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும், அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.
மதங்களை கடந்து மனித நேயத்தை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து போற்றி வருகின்றனர். புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களை பொறுத்தவரை, இந்து - முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி ஒவ்வொரு கிராமத்தினரும் உறவினர்களாக, மதங்களை கடந்து மனித நேயத்தோடு பழகி வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.