குலசேகரம் அருகே கணவன் மனைவி தற்கொலை ..!! காரணம் கடன் சுமையா ?
குலசேகரம் அருகே கணவன் மனைவி தற்கொலை ..!! காரணம் கடன் சுமையா ?
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சூரியகோடு முள்ளங்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஐசக் (40). பிளம்பிங் தொழில் செய்து வரும் இவருக்கு சந்தியா (34)என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கணவன் ஜான் ஐசக் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமலும் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனிடையே சந்தியா தனது கணவன் ஜான்சனுக்கு தெரியாமல் அழகன்பாறை அருகே தட்டான்விளையை சேர்ந்த வர்க்கீஸ் என்பவரது மகன் ஆன்றோ பிரபிளின் என்பவரை திருமணம் செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக ரூ. 30 லட்சம் வரை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ஆன்றோ பிரப்ளின் தனது தாயுடன், சூரியகோடு அருகே கோட்டூர்கோணம் கீழவிளையில் வசிக்கும் சந்தியாவின் தாய் காந்தியின் வீட்டிற்குச் சென்று, சந்தியா தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராவிட்டால் போலீசில் புகார் கொடுப்பதாக கூறி தகராறு செய்து உள்ளார்.
இதையடுத்து மகள் சந்தியாயை அவரது தாய் செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்கப்படாத நிலையில் நேரடியாக சந்தியாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மகள் சந்தியா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், மருமகன் ஜான் ஐசக் விஷம் குடித்து கட்டிலில் இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குலசேகரம் போலீசார் தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவன், மனைவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.