வீட்டில் கணவர் உடல்.. வாக்குச்சாவடியில் மனைவி.. புவனகிரியில் நெகிழ்ச்சி..!

வீட்டில் கணவர் உடல்.. வாக்குச்சாவடியில் மனைவி.. புவனகிரியில் நெகிழ்ச்சி..!

Update: 2022-02-24 18:31 GMT

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் இன்று (24ம் தேதி) காலை 7 மணி முதல் மறு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. ​​​​ஏற்கெனவே இந்த வாக்குச் சாவடியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் மறு வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில், இன்றைய வாக்குப்பதிவின்போது 4வது வார்டுக்கு உட்பட்ட முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி வனிதா என்பவர், சில பெண்களுடன் ஆட்டோவில் வாக்களிக்க வந்தார். அப்போது அவர் அழுதபடியே வாக்களித்து விட்டு சென்றார்.


இதுபற்றி அங்கிருந்தவர்கள் விசாரித்தபோது, உடல்நலக்குறைவால் அவரது கணவர் சங்கர் இன்று காலை இறந்ததாகவும், அவரது சடலம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வனிதா வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்ததும் தெரிய வந்தது.

வாக்குப்பதிவை முடித்தவுடன் அவர் வீட்டிற்கு திரும்பிச்செல்ல ஆட்டோவிற்கு சொல்லிவிட்டு காத்திருந்தார். அதற்குள், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வனிதாவை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இறந்த கணவரின் சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு, வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

Similar News