10 ஆம் வகுப்பு தேர்வெழுத சென்ற மனைவியை தடுத்து ஆசிட் வீசிய கணவன் !

10 ஆம் வகுப்பு தேர்வெழுத சென்ற மனைவியை தடுத்து ஆசிட் வீசிய கணவன் !

Update: 2022-03-19 17:20 GMT

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மனைவி மீது கணவரே ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்ஹாம் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமியான கீதா ஆருணி-க்கு சிறுவயதிலேயே பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவருடன்  கீதா ஆருணி குடும்பம் நடத்தி வந்தார். திருமணம் முடியும் போது 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கீதா, திருமணமானதும் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.

குழந்தையும் பிறந்ததால் அவரால் படிப்பை தொடர முடியாமல் போனது. இதனிடையே, தமது பள்ளி ஆசிரியர்களின் உதவியால் கடந்த ஆண்டு மீண்டும் 10ஆம் வகுப்பில் கீதா சேர்ந்தார். ஆனால், படிப்பை தொடர கணவர் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால், படிப்பை விட்டுவிடுமாறு பல முறை கூறியும் கீதா அதை கேட்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 


இதனைத் தொடர்ந்து, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற கீதா, அங்கிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த வாரம் முதலாக, அவருக்கு பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இந்நிலையில், கணவர் ரமேஷ், கீதா தேர்வு எழுதும் மையத்துக்கு சென்றுள்ளார். அங்கும் கீதாவை தடுத்து நிறுத்தி தேர்வு எழுத வேண்டாம். வீட்டுக்கு சென்றுவிடலாம் எனக் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த கீதா, இதுதான் கடைசித் தேர்வு, முடிந்ததும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் கொண்டு வந்திருந்த ஆசிட்டை கீதாவின் முகத்திலும், உடலிலும் வீசினார். இதனால் வலியில் அலறித்துடித்த கீதா, அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷையும் அவர்கள் பிடித்து போலீசாரிடம் கொடுத்தனர்.

இதனையடுத்து ரமேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

newstm.in

 

Similar News