காட்டுக்குள் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்... தாயும், சேயும் பலி!!
காட்டுக்குள் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்... தாயும், சேயும் பலி!!
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி என்பவர் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையுடன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பார்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.
அவர்களுக்கு கஜேந்திரன் (3), பூமிகா (2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே பார்வதி 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளதால், மீண்டும் கர்ப்பமானதை கணவன், மனைவி இருவரும் குடும்பத்தினரிடம் மறைத்தனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் நாழிக்கல்பட்டி கிராமம் துர்கை அம்மன் கோவில் அருகில் உள்ள கரடு பகுதிக்கு வந்தனர். அப்போது பார்வதிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டு அங்கேயே பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை இறந்து பிறந்ததை கண்ட கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை பிறந்ததை குடும்பத்தினரிடம் சொல்ல முடியாது என்பதால் இறந்துபோன குழந்தையை அங்கேயே புதைத்து விடலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து பூபதி துர்க்கை அம்மன் கோவில் பின்புறம் ஒரு காட்டில் குழியைத் தோண்டி அதில் குழந்தையை புதைத்தார். இதனையடுத்து பார்வதி தனக்கு உடல்நிலை மிகவும் முடியவில்லை, தாகமாக உள்ளது ஏதாவது குடிக்க வாங்கி வாருங்கள் என பூபதியிடம் கூறியுள்ளார்.
உடனடியாக பூபதி கடை பகுதிக்கு வந்து தண்ணீர் வாங்கிக் கொண்டு சென்று பார்வதிக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் பார்வதியும் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார். இதனை கண்ட பூபதி திகைத்துப் போய் செய்வதறியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மல்லூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பூபதி புதைத்த குழந்தையின் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாப் பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in