'சமாதியில் இருக்கிறேன்.. ஆனால் சாகவில்லை' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானாந்தா..!!

'சமாதியில் இருக்கிறேன்.. ஆனால் சாகவில்லை' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானாந்தா..!!

Update: 2022-05-13 05:25 GMT

நித்யானந்தாவிற்கு உடல் நலம்பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அவருக்கு 27 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வருகிறது. 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “பரமசிவனின் ஆசிகள்… என் ஹேட்டர்கள் நான் இறந்துவிட்டதாகப் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. தனக்குப் பேசவோ சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும்.

மக்கள், பெயர்கள், இடங்கள் பற்றிய இணைப்பு முழுமையாக எனக்குக் கிடைக்கவில்லை. கைலாசாவின் ஸ்பேஸ் மற்றும் வைபரேஷன்தான் மனதில் அதிகமாக உள்ளது. என்னுடைய இளைய வயதிலிருந்து கௌரி விரதம், பச்ச பத்னி விரதம் என என் குலதேவதை மாரியம்மனுக்கு விரதம் இருந்து வருகிறேன். 44 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இருந்து வருகிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை.

நான் சமாதியில் மட்டுமே உள்ளேன். இன்னும் சிகிச்சையிலிருந்து வரவில்லை. தற்போது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் என்பதைவிட, என்னுடைய பக்தர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்றும் கூறலாம். மருத்துவர்கள் என்னுடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறார்கள்.

எனது நித்ய சிவ பூஜை மட்டும் தினமும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நான் இன்னும் சாப்பிடவோ, தூங்கவோ இல்லை. நலம்பெற வாழ்த்திய பக்தர்கள் அனைவருக்கும் நன்றி. 28 நாட்கள் பத்னி விரதம் செய்தேன். நான் இறந்து விட்டதாக சில வெறுப்பாளர்கள் பொய்யும் புரட்டும் செய்ய முயல்கிறார்கள். அதுதான் என் உடல்நிலைக்குக் காரணம்” என விளக்கம் அளித்துள்ளார்.


 

Similar News