தந்தையின் நிழலில் வாழ விரும்பவில்லை.. பிரபல நடிகரின் மகன் பேட்டி..!

தந்தையின் நிழலில் வாழ விரும்பவில்லை.. பிரபல நடிகரின் மகன் பேட்டி..!

Update: 2022-04-25 14:07 GMT

கடந்த 2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த ‘அலைபாயுதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாதவன்.

தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். கோலிவுட்டின் சாக்லேட் பாய் என்று இவரை அனைவரும் அழைப்பார்கள். அவருக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். தற்போது அவருக்கு 17 வயது ஆகிறது.

வேதாந்த், விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். இதனால் இவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.


அந்த வகையில், கோபன்ஹேகனில் நடந்த டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் வேதாந்த் தங்கப் பதக்கம் வென்றார். இந்த செய்தியை தனது சமூக ஊடக பக்கத்தில் நடிகர் ஆர்.மாதவன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வேதாந்த், தூர்தர்ஷன் இந்தியா தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான எனது அப்பா மாதவனின் நிழலில் வாழ விரும்பவில்லை; எனக்கென ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன்.

எனது பெற்றோர் என்னை எப்போதும் நன்றாக கவனித்து வருகின்றனர். எனக்காக எனது பெற்றோர் துபாய்க்கு மாறியது எனக்காக செய்த முக்கிய தியாகம்” என்று கூறினார்.

வேதாந்த்திற்கு சிறந்த நீச்சல் பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக நடிகர் மாதவனும் அவரது குடும்பத்தினரும் கடந்த ஆண்டு துபாய்க்கு குடிபெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதாந்த் இதற்கு முன்பு, கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் லாட்வியா ஓபனில் வெண்கலப் பதக்கம்  வென்றார். இதையடுத்து, ஜூனியர் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்பில் நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என ஏழு பதக்கங்களை வென்றுள்ளார்.

Similar News