இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும் அதற்கு தட்டுப்பாடு உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு நிலையங்களில் மக்கள் பல மணி நேரம் காத்துகிடக்கின்றனர். 

இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சரகள் அனைவரும் நேற்று ராஜினாமா செய்தனர். புதிதாக பதவியேற்ற நிதியமைச்சரும் பதவி விலகினார். இந்த நிலையில், அதிபர் பதவி விலக வேண்டும் என கூட்டணி கட்சியினர், எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். 

இதனை ஏற்க அதிபர் மறுத்துவிட்டார். இந்த பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிபர் பதவி விலகிய பின்னரே புதிய அதிபரை தேர்வு செய்ய முடியும் என எதிர்க்கட்சியினர் கூறினார்கள்.

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அதிபருக்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளதாகவும், இதனால் அதிபர் எந்த வகையிலும் பதவி விலக மாட்டார் எனவும் கூறினார். 

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அவையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

newstm.in

Tags: