பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள்களுக்கு நித்யானந்தா வெளியிட்ட முக்கிய தகவல்!!

பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள்களுக்கு நித்யானந்தா வெளியிட்ட முக்கிய தகவல்!!

Update: 2022-06-08 12:04 GMT

பல்வேறு மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.

அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்த அவர், கடந்த இரு வாரங்களாக செயல்படாமல் இருந்தார். இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் பீதி கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்போது நித்தியானந்தா கோமா நிலைக்கு சென்று இருப்பதாகவும் செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பல இடங்களில் வலம் வந்த நித்தியானந்தா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய உணவு முறைகளுக்கு பழக்கப்பட்ட அவர் தற்போது அவ்வகை உணவுகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் சுற்றிலும் கடல் இருப்பதால் உப்புக்காற்று அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

உடல் மெலிந்து சோர்வான நித்திக்கு கல்லீரல் அலர்ஜீயும், சிறுநீரக தொந்தரவும் ஏற்பட்டுள்ளது. போக போக நுரையிரல் தொற்றுவரை சென்று தற்போது மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வருகின்றார்.

இந்நிலையில், மீண்டும் அவர் இறந்து விட்டதாக செய்தி சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து நித்யானந்தா நேற்று வெளியிட்ட பதிவில் பதில் அளித்துள்ளார்.

அந்த பதிவில், “பரமசிவனின் ஆசிகள், அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசாவாசிகள் நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். மேலும் உங்கள் அனைவரையும் உள் இடத்தில் இணைக்கிறேன். மிக விரைவில் உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்கங்களை மேற்கொள்வேன். மேலும், உயர்ந்த கொள்கைகள் மற்றும் மகா கைலாசாவின் அசாதாரணமான ஆற்றலைப் பகிர்ந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, நித்யானந்தா மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஜூன் 14-ம் தேதிக்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Similar News