60,000 ரூபாயாக உயர்வு.. தமிழக அரசு தகவல்..!

60,000 ரூபாயாக உயர்வு.. தமிழக அரசு தகவல்..!

Update: 2022-07-16 16:22 GMT

அரசு மருத்துவமனைகளில் செய்து கொள்ளும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகை, 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரிய கரும்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த கனிமொழி என்பவர் கடந்த 2018ம் ஆண்டு, பாடி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்.

இருப்பினும், கருவுற்ற போது கர்ப்பத்தை கலைத்தால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டதாகவும், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை தோல்வி அடைந்ததால் தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுதாரர் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், மருத்துவ துறை அதிகாரிக்கும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதேபோல் நடந்த சம்பவத்திற்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் சுமார் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார். மேலும் மனுதாரர் கூலித் தொழிலாளி என்றும், குடும்பம் வறுமையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை  வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குடும்ப கட்டுப்பாடு காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்து விட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், அது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார்.

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை 60 நாட்கள் வரை இருந்தால் சிகிச்சை செலவு 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கூடுதல் தலைமை  வழக்கறிஞர் வழங்கிய தகவல்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி எம். தண்டபாணி, வழக்கை முடித்து வைத்து, மனுதாரருக்கு வேறு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் தனியாக வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டார்.

Similar News