பண மோசடி வழக்கில் சுயேச்சை வேட்பாளர் கைது.. ஒருவேளை இவர் வெற்றிபெற்றால்?
பண மோசடி வழக்கில் சுயேச்சை வேட்பாளர் கைது.. ஒருவேளை இவர் வெற்றிபெற்றால்?
அட.. இது என்னப்பா கொடுமை என ஒவ்வொருவரும் எண்ணும் அளவுக்கு அரியலூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது பண மோசடி புகாரில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் சாக்கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மணிவேல். அதிமுகவை சேர்ந்த இவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தலைமை தனக்கு சீட் வழங்கும் என எதிர்பார்த்து இருந்தார். ஆனால், சீட் வழங்காததால் தற்போது 16ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளராக மணிவேல் களம் காண்கிறார்.
இந்நிலையில், செந்துறை ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர் கடையில் மணிவேல் கடந்த ஆறு மாதங்களாக கம்பி வாங்கியுள்ளார். இதையடுத்து கம்பி வாங்கிய வகையில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 563 ரூபாய் பாக்கி வைத்துள்ளார். அந்த தொகையை தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று மணிவேலிடம் பணத்தை கேட்கும்போது பணத்தை தர முடியாது என்று அசிங்கமாக திட்டியதோடு கல்லை எடுத்து பணம் கேட்டு வந்தால் மண்டையை உடைத்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த ஜாகிர் உசேன், இது தொடர்பாக அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி மணிவேலை கைது செய்தனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சாதாரண மனிதராக இருக்கும்போதே இப்படி மோசடி நபராக இருந்தால், வெற்றிபெற்ற பின்னர் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார் எனவும் இச்செய்தியை குறிப்பிட்டு கருத்துதெரிவித்து வருகின்றனர்.
newstm.in