வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.. 3ஆவது போட்டியில் அசத்திய கில்
வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.. 3ஆவது போட்டியில் அசத்திய கில்;
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஷிகர் தவான் அணியை கேப்டனாக வழிநடத்தி சென்றார். இதில் தொடக்க இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர். சிறப்பான பார்மில் உள்ள இந்த தொடக்க ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர்.
தவான் 58 ரன்கள் எடுத்திருந்த போது வால்ஷ் பந்துவீச்சில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் போட்டி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் போட்டி பாதிக்கப்பட்டதால் மழை நின்ற பின் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்பின்னர் ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் சுப்மன் கில் சதத்தை நெருங்கி வந்தார். இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது. சுப்மன் கில் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். மேலும் தொடர்ந்து ஆட்ட நேரம் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவு (36 ஓவர்களில் 225 ரன்கள்) அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் டி.எல்.எஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் ,கைல் மேயெர்ஸ் களமிறங்கினர்.தொடக்கத்தில் கைல் மேயெர்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ,பின்னர் வந்த ப்ரூக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ஷாய் ஹோப் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிக்கோலஸ் பூரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி26 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.இந்தியா சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் 119ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது.
newstm.in