செயற்கைக்கோள் மூலம் இணைய இணைப்பு.. உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி..!
செயற்கைக்கோள் மூலம் இணைய இணைப்பு.. உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி..!
ரஷ்ய படைகள், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் ஊடுருவியது. தற்போது, தலைநகர் கீவ் வரை சென்று பல ராணுவ தளங்களை அழித்துள்ளனர். இந்நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன.
ஏவுகணை தாக்குதல்கள், குண்டு வீச்சு, சைபர் தாக்குதல் போன்றவற்றால் உக்ரைனின் இணைய இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவின் எலான் மஸ்க்கிடம் உக்ரைன் டிஜிட்டல் துறை அமைச்சர் உதவி கோரியிருந்தார்.
அது தொடர்பான சமூக ஊடகப் பதிவில், ‘நீங்கள், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றத்தை முயற்சிக்கிறீர்கள். ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. உங்கள் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் இருந்து திரும்புகிறது.
ரஷ்ய ராக்கெட்டுகளோ, உக்ரேனிய குடிமக்களை தாக்குகின்றன. உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் நிலையங்களை வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் கூறியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை உக்ரைனில் செயல்படுத்தியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் என்பது 2000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் தொகுப்பை இயக்குகிறது. உலகம் முழுவதும் இணைய இணைப்பை வழங்குவதே இதன் நோக்கம்.
எலான் மஸ்க் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை மேலும் 50 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவியது. அவை, பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.