நகைக்கடன் இருக்கா..?: அப்போ ஓய்வூதியம் கிடையாது..!
நகைக்கடன் இருக்கா..?: அப்போ ஓய்வூதியம் கிடையாது..!
தமிழகத்தில், ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் முதியோருக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் வகையில் முதியோர் ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
1962-ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது மாதம் 20 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதி படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, நலத்திட்ட நிதியுதவி பெறும் பயனாளிகள் தகுதியானவர்கள் தானா என ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் உண்மைத்தன்மை கண்டறிய, அவர்களிடம் ஆதார் எண் பெறப்பட்டது.
இதன் மூலம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ள விவரங்கள், அவர்கள் பெயரில் சொத்துக்கள் இருக்கிறதா என்பது போன்ற விவரங்கள் கண்டறியப்பட்டு, பட்டியலிடப்பட்டுள்ளன.
ஓய்வூதியம் பெறும் முதியோர் பெயரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் இருந்தால், நிதியுதவியை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய்த் துறையினர் கூறுகையில், ‘ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் இருப்போருக்கு நிதியுதவி வழங்குவதே ஓய்வூதிய திட்டத்தின் நோக்கம். வசதி உள்ளவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படுகிறது.
பலருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. சிலர், மகன் அல்லது மகள் வீட்டில் வசிக்கின்றனர். வசதியோடு இருப்பவர்களும் நிதியுதவி பெறுவது தெரிய வந்திருப்பதால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.