மகனை காப்பாற்ற 65 வயது பெரியவரை ஊர் இளைஞர்கள் காலில் விழு சொன்ன பரிதாபம்..!!

மகனை காப்பாற்ற 65 வயது பெரியவரை ஊர் இளைஞர்கள் காலில் விழு சொன்ன பரிதாபம்..!!

Update: 2022-06-17 04:45 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிச்சனகோட்டகத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அதேபகுதியை சேர்ந்த நடராஜன் மகன் நாகூர்மீரானுக்கும், அஞ்சுகண்ணு மகன் கலைசெல்வனுக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் உள்ளூர் பஞ்சாயத்துக்கு சென்ற நிலையில், பஞ்சாயத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 ஆயிரத்தை கட்டமுடியாத 65 வயது அஞ்சுகண்ணுவை, தன்னைவிட வயதில் சிறியவரான நாகூர்மீரான் மற்றும் சிலரது காலில் விழ வைத்ததாகத் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஞ்சுகண்ணு மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில், உயிரிழந்த அஞ்சுக்கண்ணுவை, காலில் விழவைத்தவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்ததால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது வரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அஞ்சுகண்ணு குடும்பத்தினர், உறவினர் மற்றும் கிராமத்தினர் ஏராளமானோர் திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகே 2வது நாளாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அஞ்சுகண்ணுவின் மகன் கலைசெல்வன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மறியல் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

Similar News