வெள்ளி தோறும் மாணவர்களுக்கு இது கட்டாயம்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
வெள்ளி தோறும் மாணவர்களுக்கு இது கட்டாயம்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சார்பில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ‘உடற்கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அடிப்படையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.
இதையடுத்து, மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்க உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதன்பின், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு உலக உடல் திறனாய்வு தேர்வை நடத்த வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும். மாணவ - மாணவியரை இரு அணிகளாக பிரித்து, அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுகளை விளையாட வைத்து ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு மாணவரையும் பள்ளியில் ஏதாவது ஒரு விளையாட்டில் கலந்துகொள்ள பயிற்சி அளிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, உடற்பயிற்சிக்கான பாட குறிப்புகள், விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி, விளையாட வைத்த பதிவேடு, உடல் திறனாய்வு தேர்வு பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை முறைப்படி பராமரித்து அதிகாரிகளின் ஆய்வில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.