நகைக் கடன் தள்ளுபடி.. கூட்டுறவுத் துறை புதிய உத்தரவு..!
நகைக் கடன் தள்ளுபடி.. கூட்டுறவுத் துறை புதிய உத்தரவு..!
தமிழக அரசு மாநில, மாவட்ட மத்திய, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை வழங்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சலுகையை பெற, ஒரே நபர் வெவ்வேறு வங்கிகளிலும், போலி நகைகளையும் அடகு வைத்து கடன் பெற்றனர். இந்த முறைகேடுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதன் பின்னர் அரசு விதித்த பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளும், கடன் தள்ளுபடி சான்றும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடிக்கு தேர்வு செய்த பயனாளிகள் குறித்து சிறப்பு தணிக்கை செய்ய கூட்டுறவு தணிக்கை பிரிவுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கூட்டுறவு தணிக்கை பிரிவு அதிகாரிகள் ஆய்வு பணியை துவங்கியுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திலும், மாவட்டங்களில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு தொடங்கி உள்ளது.
நகைக் கடன் தள்ளுபடி பயனாளிகள் அடகு வைத்து பெற்ற கடன் தொகை, நகை மதிப்பு, அதற்கான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.