கள்ளக்குறிச்சி கலவரம்.. பரவும் போலி சிசிடிவி காட்சியால் மீண்டும் பதற்றம் !!

கள்ளக்குறிச்சி கலவரம்.. பரவும் போலி சிசிடிவி காட்சியால் மீண்டும் பதற்றம் !!

Update: 2022-07-18 19:45 GMT

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்தார். அவர் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை என கூறப்படுகிறது. இதில் பெற்றோர் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

இந்த நிலையில் மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நான்காவது நாளாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் காவல்துறையினர் மீது போராட்டக்கார்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர். பள்ளியும் சூறையாடப்பட்டது.

இந்த கலவரத்துக்கு போலியான தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவியதே காரணம் என கூறப்படுகிறது. இதனால் தகவல்களை பரப்பியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கலவரம் ஓய்ந்த நிலையில் இன்று மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. 

மாணவி உயிரிழந்த நாளன்று பள்ளி தாளாளரின் மகன் நள்ளிரவில் பள்ளிக்குள் சென்ற காட்சி என ஜூலை 13ஆம் தேதி 10.30 மணியளவில் பதிவான சிசிடிவி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது போலியானது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

கள்ளக்குறிச்சி காவல்துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வேறு இடத்தில் நடந்த வீடியோவை கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய்செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பிவருகின்றனர். பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

newstm.in
 

Similar News