தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது.. கமல்ஹாசன் கவலை ட்வீட்..!
தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது.. கமல்ஹாசன் கவலை ட்வீட்..!
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வருகின்றனர்.
இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால், கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பக்கத்து மாநிலத்தில் நடப்பது ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது எனவும், முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது.
ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 9, 2022