சட்டப்பேரவையில் நடந்த காரசார விவாதம்..!!
சட்டப்பேரவையில் நடந்த காரசார விவாதம்..!!
தமிழ்நாடு சட்டபேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை சுட்டி க் காட்டி, நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நகைக் கடன் பெற்றதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தகுதியுடைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் செய்வார்கள் என்று நம்பி தானே மக்கள் நகைக்கடனை பெற்றனர் என குறிப்பிட்டார். அப்போது மீண்டும் குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முறைகேடுகளில் ஈடுபட்டு நகை கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா? முறைகேடுகள் நடந்ததை எதிர்கட்சி தலைவர் ஆதரிக்கிறாரா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தகுதியானவர்கள் உரிய ஆதாரத்துடன் அணுகினால், அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி வழங்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக, தெரிவித்தார். இதனையடுத்து, நகை கடன் தள்ளுபடி தொடர்பான விவாதம் முடிவுக்கு வந்தது.