பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த கேரள வாலிபர்..!!

பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த கேரள வாலிபர்..!!

Update: 2022-06-06 05:30 GMT

சென்னையில் கடந்த 15 நாட்களில் 72 லேண்ட்லைன் இணைப்புகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை பிஎஸ்என்எல் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து சென்னை தொலைப்பேசியின் சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அதன்படி சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

அதன்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் நைனார் குப்பம் பகுதியில் இருக்கும் சிறிய வீடு ஒன்றில் சென்னை தொலைபேசி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அங்கு 7 சிம் பெட்டிகளை மீட்டனர். அந்த ஒவ்வொரு பெட்டியும் 32 சிம் கார்டுகளை செயலாக்கும் திறன் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நபர்கள் வாடகை வீட்டில் இருந்து கொண்டு சட்ட விரோதமாக டவரில் இருந்து சிக்னல் ஹேக் செய்து டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போன்ற ஒன்றை நடத்தி வந்தது தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து அந்த வீட்டில் வசித்து வந்த நபரைக் கைது செய்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 35 வயது நாபல் என்பது தெரியவந்தது. நைனார் குப்பம் பகுதியில் வாடகை வீடு ஒன்று எடுத்து இதுபோன்ற மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார். இவர்கள் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களை ஏமாற்றி அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

போலி முகவரி சான்றிதழ்களை வைத்து மொத்தம் 224 சிம் கார்டுகளை வாங்கி உள்ள இவர்கள், அதனை பிரத்தியேக கருவிகளில் இணைத்து, வாடிக்கையாளர்களுக்கு நெட்வொர்க்கை உருவாக்கி அவர்களுக்கு ஒரு பிரத்தியேக மொபைல் எண்ணைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நெட்வொர்க்கில் பதிவு செய்துள்ளனர். அவர் பதிவு செய்த நம்பர்கள் அனைத்தும் போலி ஆதார் அட்டை மற்றும் போலி முகவரிச் சான்றிதழை பயன்படுத்தி வாங்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அந்த குறிப்பிட்ட எண்ணில் பேசுபவர்கள் யாரிடம் பேசுகிறார்கள் என்ற தகவல் பதிவாகாது. இதற்காக அவர் பிஸ்என்எல் நெட்வோர்க்கை ஹேக் செய்துள்ளார். மேலும் வெளி நாடுகளில் வசிப்பவர்கள் ஒரு பிரத்யேக கருவியை பயன்படுத்தி வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) அழைப்புகளைச் செய்கிறார்கள். இதன் மூலம் தனது வீட்டிலேயே சிறிய அளவிலான டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் உருவாக்கி அதன் மூலம் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியுள்ளார். இப்படி ரூட்டரை வைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நெட்வெர்க்கை திருடி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நாபல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், கேரளாவில் இருந்து இந்த நெட்வொர்க்கை இயக்கி வரும் முக்கிய குற்றவாளியான அனீஸ் உள்ளிட்ட இருவரைத் தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Similar News