மழலையர் பள்ளி கட்டடம் சேதம்.. தொடங்குகிறதா 3ம் உலகப் போர்..?
மழலையர் பள்ளி கட்டடம் சேதம்.. தொடங்குகிறதா 3ம் உலகப் போர்..?
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல், ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
ரஷ்யா படையெடுக்கும் பட்சத்தில், உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் தெரிவித்தன. மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் ஆயுதங்களை அனுப்பி வைத்தது.
இதனால், ரஷ்யா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தன.
அதன் பின்னர், பல்வேறு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்க அதிபரின் எச்சரிக்கை என பலதரப்பு செயல்பாடுகளுக்கு பின்னர் கிரிமியாவில் நடைபெற்று வந்த போர் பயிற்சி நிறைவு பெறுவதாகவும், படைகள் முகாம் திரும்புகின்றன என்றும் ரஷ்யா அறிவித்தது.
ஆனால், உக்ரைன் எல்லையில் தனது படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து எல்லைகளில் ரஷ்ய படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த படைகள் இன்னும் ஓரிரு நாட்களில் உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், உக்ரைன் மீது இன்று குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. உக்ரைனின் எல்லையோர மாகாணமான டான்பஸ் மாகாணத்தில் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று திடீரென குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றது. அந்த கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி மீது இந்த தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை யார் நடத்தியது என்று இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. ஆனால், ரஷ்யாவே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேவேளை, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினரா? அல்லது உண்மையிலேயே ரஷ்யாதான் இந்த தாக்குதலை நடத்தியதா? அல்லது வேறு யாரேனும் இந்த தாக்குதலை நடத்தினரா? என பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்குமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.