கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. தொழிலதிபர் மகனிடம் விசாரணை !!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. தொழிலதிபர் மகனிடம் விசாரணை !!

Update: 2022-07-08 07:30 GMT

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்த வழக்கில் அதிமுக ஆட்சியில் பெரியளவில் விசாரணை நடத்தப்படவில்லை. தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு விசாரணை சூடுபிடித்துள்ளது. மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் மணல் சப்ளையர் ஓ.ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடம் (48) நேற்று கோவையில் விசாரணை நடத்தினர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது குவாரிகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை ஆறுமுகசாமி பெற்றிருந்தார்.

அப்போது ஆறுமுகசாமியின் சொத்துக்கள் பல மடங்கு பெருகியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் மகன் பெயரில் பல்வேறு நிறுவனங்களை தொடங்கினர். பின்னர் அறக்கட்டளை துவக்கி கல்வி, மருத்துவ உதவி வழங்கினர். மணல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் போலீசார் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை வளையத்திற்குள் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரை கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, கொடநாட்டில் ஆறுமுகசாமி தரப்பினருக்கு சொந்தமாக ஒரு டீ எஸ்டேட் இருப்பதாகவும், இந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா, சசிகலா, கொடநாடு பங்களா தொடர்பான பல்வேறு ஆவணங்கள், ஆதாரங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் குறித்தும், ஆறுமுகசாமியிடம் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஒப்பந்தம், அரசியல் தொடர்பில் இருக்கிறார்களா, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு இவர் சந்தித்த அரசியல் தலைவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டு தகவல்களை சேகரித்துள்ளதாக தெரிகிறது.  

இவ்வாறு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விரிவடைவதால் விரைவில் இக்கொடூரத்துக்கான காரணம், தொடர்புடையவர்கள் குறித்த தகவல் வெளிவரும் என அதிமுகவினர் எதிர்பாத்து உள்ளனர். 

newstm.in

Similar News