கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம்!!மீண்டும் லாக்-அப் மரணம்...!!
கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம்!!மீண்டும் லாக்-அப் மரணம்...!!
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி, முந்திரி தோப்பு, பேட்டைகாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மீது 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சோழவரம் காவல் நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜசேகரை நேற்று கொடுங்கையூர் போலீசார் வழக்கு விசாரணைக்காக அழைத்து வந்து லாட்ஜில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர் அவரை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது அவருக்கு இன்று உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு ராஜசேகரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை கைதி சந்தேக மரணத்தைத் தொடர்ந்து சென்னை காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜசேகரிடம் விசாரணை நடத்தியவர்கள் யார் யார், எப்போது அவர் அழைத்து வரப்பட்டார், எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது குற்ப்பிடத்தக்கது.