அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

Update: 2022-06-23 11:03 GMT

மயிலாடுதுறையில் உள்ள அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் தங்கியுள்ள, பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி, மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் உதவியுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி, 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அந்த மாணவியை, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இளைஞர் நலத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


அப்போது, மாணவி லட்சுமி தனது கால்களால் வரைந்த ஓவியங்களை அவர்களிடம் காண்பித்தார். அவருக்கு, அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மாணவியின் தன்னம்பிக்கையை பார்த்து மற்ற மாணவர்களும் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தேர்வில் தோல்வி அடைந்தாலும், மதிப்பெண் குறைந்தாலும் அதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட்டு, லட்சுமி போல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

மாணவி லட்சுமியின் உயர்கல்விக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும். மேலும், காப்பகத்திற்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும்.

எந்த நிதிச்சுமை இருந்தாலும் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்காக சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் வகுப்புகள் தொடங்கும்” என்று தெரிவித்தார்.

Similar News