21 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்.. பிரதமர், பிரபலங்கள் நேரில் மரியாதை
21 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்.. பிரதமர், பிரபலங்கள் நேரில் மரியாதை
மும்பையை சேர்ந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லதா மங்கேஷ்கர் நேற்று காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இசை குயிலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தநிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மேலும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, கோவா முதலமைச்சசர் பிரமோத் அஞ்சலி செலுத்தினர். லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.
இறுதி அஞ்சலி நிகழ்வில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே , தேசியவாத காங். கட்சித் தலைவர் சரத் பவார், சச்சின், ஷாருக்கான் உள்ளிட்டோரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முப்படை வீரர்கள் மற்றும் மகாராஷ்டிர காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர். லதா மங்கேஷ்கர் உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. லதா மங்கேஷ்கரின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி உரிய நடைமுறையுடன் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து மும்பை சிவாஜி பூங்காவில் முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழுங்க லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனை நேரிலும் தொலைகாட்சியிலும் பார்த்த லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். எனினும் லதா மங்கேஷ்கர் தனது குரல்கள் மூலம் என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
newstm.in