சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அதிமுக, சட்டசபையில் எவ்வாறு செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
தமிழக பாஜகவின் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அதிமுகவுக்கு சான்று அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் மக்கள் பிரச்னைகளை புள்ளி விவரங்களுடன் சட்டசபையில் தெரிவிக்கிறோம். பாஜக சட்டசபை கட்சித் தலைவர் எப்படி பேசுகிறார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
வி.பி.துரைசாமி எந்த கட்சியில் இருந்து பாஜகவுக்கு போனார் என்பது எல்லோருக்கும் தெரியும். நான், 48 ஆண்டுகளாக ஒரே கட்சியில் உள்ளேன்; அவரை போல் கட்சி மாறவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. வழிப்பறி, திருட்டு, கட்டப் பஞ்சாயத்து தொடர்ந்து நடக்கிறது. ஓராண்டில் ஏராளமான கொலைகள், திருட்டு, செயின் பறிப்புகள் நடந்துள்ளன.
இதை தட்டிக் கேட்க திறமை இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் அதை முறையாக கவனிக்காததால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது.
அதிமுக ஆட்சியில், சட்டத்தின் ஆட்சி நடந்தது. யார் குற்றம் செய்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்தோம்; அரசியல் தலையீடு இல்லை.
இன்று திமுகவினர் ஆங்காங்கே உள்ள காவல் நிலையத்தில் தலையிட்டு, குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர். இதனால், குற்றங்கள் குறையவில்லை.
போதைப்பொருள், கஞ்சா விற்காத இடம் இல்லை. அரசால் தடுத்து நிறுத்த முடியாத சூழல் உள்ளது. ஆளும் கட்சியினர் கஞ்சா விற்பவர்களுக்கு துணை நிற்கின்றனர். இதனால், காவல் துறையால் குற்றவாளிகளை தடுக்க முடியவில்லை.
ஸ்டாலின் நேரடியாக தன் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், விமர்சனம் வரும் என்பதால் கொல்லைப்புற வழியாக அமைச்சராக்க முயற்சிக்கிறார். எனவே, பல இடங்களில் தீர்மானம் போடுகின்றனர்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.