சென்னையில் மின்கசிவு.. 5 இருசக்கர வாகனங்கள் சேதம்..!
சென்னையில் மின்கசிவு.. 5 இருசக்கர வாகனங்கள் சேதம்..!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் குலாம் அப்பாஸ் அலிகான். இவர் வாஷிங் மெஷின் பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறார். இவர் குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் மொத்தம் 8 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அப்பார்ட்மென்டில் குடியிருக்கும் நபர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை வீட்டருகே நிறுத்தி வைப்பது வழக்கம். அதேபோல, நேற்றும் வீட்டருகே இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த தீயை உடனே அணைத்தனர். ஆனால், அதற்குள் தீ முழுவதும் பரவியதால் 5 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவலறிந்த ஆயிரம் விளக்கு போலீசார் தீ விபத்து குறித்து நடத்திய விசாரணையில், மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அருகிலிருந்த இருசக்கர வாகனங்களில் தீப்பற்றி இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.