தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்..!!

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்..!!

Update: 2022-06-01 04:35 GMT

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார் திமுக இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கு வந்தால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அமைச்சராகவில்லை.

அதனைத் தொடர்ந்து, திமுகவில் அண்மை காலமாக உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற கோரிக்கை தீவிரமாக எழுந்து வருகிறது. அமைச்சர்கள் வெளிப்படையாகவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவைத்திருப்பது குறித்து அறிந்தேன்.

என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

கழகம் வழங்கிய வாய்ப்பில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்து, கழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன்.

கழகத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்க அடுத்தக்கட்ட திட்டமிடல்களுடன் பாசறைக் கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன்.

இந்தச் சூழலில், என்மீதுள்ள அன்பின் காரணமாக, ‘எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போது கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்.

எனவே, பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் வழியில் வந்த நம் கழகத் தலைவர் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம். மக்கள் பணியாற்றிடுவோம். கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


 

Similar News