வாட்டர் பாட்டிலில் பல்லி.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!
வாட்டர் பாட்டிலில் பல்லி.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!
தஞ்சாவூர் மாவட்டம் கீழ வீதி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு சமயபுரம் சென்றுள்ளார். நேற்று காலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பழனிசாமி முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.
அதன் பிறகு அம்மனை தரிசிப்பதற்காக பொது தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பேத்தி, தாகமாக இருக்கிறது தண்ணீர் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விற்றுக்கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலை பழனிசாமி வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் மூடியைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பல்லி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த தண்ணீர் பாட்டில் விற்ற இளைஞரிடம் கேட்டபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பல்லி கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு பழனிசாமி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.
ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் படி அறிவுறுத்தியதால் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வழக்கு தொடர பழனிசாமி சென்றார்.
இதுபோன்ற தரமில்லாத நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற தவறுகள் இனி வரும் நாட்களில் நடக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.