இந்த மாவட்டத்திற்கு வரும் 22-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!
இந்த மாவட்டத்திற்கு வரும் 22-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில்களில் எந்த ஒரு திருவிழா நடைபெறாமல் இருந்தது.
தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துள்ள நிலையில், மீண்டும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 7-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், “சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு , ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 22-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது” என்று, ஈரோடு மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.