காதல் திருமணம்.. மருமகனை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த மாமனார்..!

காதல் திருமணம்.. மருமகனை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த மாமனார்..!

Update: 2022-07-04 14:31 GMT

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கிடாலூர் மண்டலம், போடலகொண்டபள்ளியைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி (26). சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், அதே ஊரைச் சேர்ந்த கந்துலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு ரவாளியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். ஊர் திரும்பியதும், ரவாளியை பெற்றோர் வலுக்கட்டாயமாக நாராயண ரெட்டியிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்று விட்டனர்.

இதையடுத்து நாராயண ரெட்டி, தனது மனைவியை ஒப்படைக்குமாறு ரவாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக ஹேபியஸ் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், ரவாளியின் கருத்தைக் கேட்ட நீதிமன்றம், அவர் பெற்றோருடன் தங்கிக்கொள்ள உத்தரவிட்டது. ரவாளிக்கு அவருடைய பெற்றோர் வேறு ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

ஆனால், ரவாளி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர், நாராயண ரெட்டியுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார். இதனால் கோபம் அடைந்த ரவாளியின் தந்தை வெங்கடேஸ்வர ரெட்டி, நாராயண ரெட்டியை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதற்காக அவரது உறவினரான சீனிவாச ரெட்டியை அணுகினார். இதை தொடர்ந்து சீனிவாச ரெட்டி தனது கூட்டாளிகள் காசி மற்றும் ஆஷிக் ஆகியோருடன் நாராயண ரெட்டியை காரில் கடத்திச் சென்றார்.

கஜாகுடாவில் இருந்து ஜின்னாரம் செல்லும் வழியில் நாராயண ரெட்டி கழுத்தை நெரித்து கொலை செய்தனர். உடலை, ஜின்னாரின் புறநகரில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றனர்.


நாராயண ரெட்டி வீடு திரும்பாததையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். நாராயண ரெட்டியின் செல்போனை ஆய்வு செய்து ஆசிப்பை கைது செய்து விசாரித்ததில், நாராயண ரெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

ஆசிப் கொடுத்த தகவலின் பேரில், ஜின்னாரம் மண்டலம் நல்லுரு கிராமத்தின் புறநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த நாராயண ரெட்டியின் உடலை போலீசார் மீட்டனர். இதையடுத்து, வெங்கடேஸ்வர ரெட்டி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News