மதுரை எய்ம்ஸ் – வகுப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு!!

மதுரை எய்ம்ஸ் – வகுப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு!!

Update: 2022-03-27 06:15 GMT

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மட்டும் நடைபெற்றுள்ளது. கட்டுமான பணிகள் எதுவும் துவங்கப்படாமல் உள்ளது.

ஜைக்கா நிறுவனம் சார்பில் வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்திருந்தது. நடப்பு 2022-23 கல்வி ஆண்டிலேயே 50 மாணவர்களை சேர்த்து வகுப்புகளை துவக்க நிர்வாக குழு திட்டமிட்டது.

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ஒப்பந்த அடிப்படையில் இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு 4 பேரும், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 4 பேரும் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான முதல்கட்ட வகுப்புகள் துவங்கும் என அதன் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இந்த வகுப்புகள் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் துவங்கிய பின்னர் மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால் மாணவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளுடன் வர வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மாணவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் ஐந்தாம் தளத்தில் இயங்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான அலுவலகத்தில் வருகையை உறுதி செய்ய வேண்டும் எனவும், கூடுதல் விபரங்களை https://jipmer.edu.in/aiims என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Similar News