மதுரை ஆதீனம் அதிமுக, பாஜக ஆதரவாளர் கிடையாது.. சொல்கிறார் அர்ஜூன் சம்பத்..!
மதுரை ஆதீனம் அதிமுக, பாஜக ஆதரவாளர் கிடையாது.. சொல்கிறார் அர்ஜூன் சம்பத்..!
அமைச்சர் சேகர்பாபு ஆதரவாளர்கள் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்களால் மதுரை ஆதீனத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
இதையடுத்து அர்ஜூன் சம்பத் கூறியதாவது: “மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளாலும், நடிகர் விஜய் ரசிகர்களாலும், இன்னும் பிற சக்திகளாலும் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்.
ஆதீனம், அரசியல்வாதிகளைப் போல நடந்து கொள்கிறார் என அமைச்சர் சேகர்பாபு அச்சுறுத்தி வருகிறார். இது அபாயகரமான போக்கு. ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் .மதுரை ஆதீனத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு கிடையாது.
சிதம்பரம் நடராஜரை இழிவுப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. இந்து சமயத்திற்கு பிரச்சனை என்றால் மதுரை ஆதீனம் குரல் கொடுப்பார்.
அதற்காக அவர் அதிமுக - பாஜக ஆதரவாளர் கிடையாது. இந்து சமய நம்பிக்கைகள் சீர்க்குலைக்கப்படுவதும், கோயில்கள் அறநிலையத்துறை பிடியில் இருப்பதை எதிர்த்தும் தான் ஆதீனம் கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்து அரசியல்வாதிகளுக்கோ, நடிகர் விஜய்க்கோ எதிரானது அல்ல. விஜய் ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் ஆதீனத்தை விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு விஜய் அறிவுரை கூறவேண்டும்.
மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணியில் அருவருக்கத்தக்க வகையில் கருத்துகள் வெளியானது கண்டனத்திற்குரியது. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்பேரணியில் பங்கேற்ற எம்பிக்கள் திருமாவளவன், வெங்கடேசன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.