மதுரை மேம்பால விபத்து – ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்!!
மதுரை மேம்பால விபத்து – ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்!!
மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது.
இம்மாதம் பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், மேம்பாலத்தின் இணைப்பு பகுதி 2021 ஆகஸ்ட் 28ஆம் தேதி இடிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளர் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் 3 வல்லுனர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனத்தார், திட்ட பொறியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர், டிசம்பர் மாதம் அதற்கான விரிவான ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறை வசம் நிபுணர் குழுவினர் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், விபத்துக்கு காரணமான JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு 40 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
newstm.in