லாரி ஏற்றி டி.எஸ்.பியை கொலை செய்த மாபியா கும்பல்!!
லாரி ஏற்றி டி.எஸ்.பியை கொலை செய்த மாபியா கும்பல்!!;
அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் உள்ள நூஹ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு தகவல் கிடைத்தது. உடனே இன்று காலை 11 மணியளவில் அவர் போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றார்.
போலீசாரை கண்டதும், சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது சுரங்கத்தில் இருந்து அதிக அளவு கற்களை ஏற்றிக் கொண்டு டிரக் வந்துள்ளது. அவ்வழியாக வந்த பிஷ்னோய், டிரக்கை மெதுவாகச் செல்லும்படி கூறியுள்ளார். அதில் ஒரு டிரக்கை ஓட்டி வந்த ஓட்டுநர், வேகமாக பிஷ்னோய் மீது வாகனத்தை மோதியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே சுரேந்திரசிங் பிஷ்னோய் உடல் நசுங்கி பலியானார். உடனடியாக டிரக்கை ஓட்டி வந்தவர் தப்பியோடி விட்டார். பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியானாவில் கனிம வளக்கொள்ளை அதிகரித்து விட்டதாவும், இதைத்தடுப்பவர்கள் கொலை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த கொடூரத்தை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய நபர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மனோகர் லால் கட்டார் உறுதியளித்ததோடு, காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
இதுகுறித்து அரியானா காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் பிஷ்னோய் கொலைக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது, கடமைக்காக உயிரை விட்ட பிஷ்னோய் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தப்ப முடியாது என்று சுரங்கத்துறை அமைச்சர் மூல்சந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பிஷ்னோய் ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.