பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதிய மம்தா!!
பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதிய மம்தா!!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல் அமைச்சர்களுக்கும் இன்று காலை ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கடிதம் எழுதியுள்ள மம்தா பானர்ஜி, பாஜகவை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், ஒரு ஒருங்கிணைந்த மற்றும் கொள்கை ரீதியான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். ‘நாட்டிற்குத் தேவையான தகுதியான அரசாங்கத்திற்கு’ வழிவகை செய்யும் ஒருங்கிணைந்த மற்றும் கொள்கை ரீதியான எதிர்ப்பு எதிர்க்கட்சிகளிடம் வேண்டும் என்பதை அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதில், “முன்னோக்கி செல்வதற்கான பாதையில் ஆலோசனை மேற்கொள்ள, ஒரு கூட்டத்திற்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்.
நம் ஒவ்வொருவரின் வசதி மற்றும் பொருத்தத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஓர் பொதுவான இடத்தில் ஒரு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
"அடக்குமுறை பாஜக ஆட்சியை" எதிர்த்துப் போராட அனைத்து "முற்போக்கு சக்திகளும்" கைகோர்க்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்போடு செயல்படுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய நாட்டின் ஜனநாயகத்தின் மீதான ஆளும் பாஜகவின் நேரடி தாக்குதல்கள் குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.