இன்னும் பல ஆடியோக்கள் கைவசம் இருக்கு- ஓபிஎஸ் டீம் பகீர் !!

இன்னும் பல ஆடியோக்கள் கைவசம் இருக்கு- ஓபிஎஸ் டீம் பகீர் !!

Update: 2022-07-14 08:00 GMT

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் புகைச்சலாக இருந்த நிலையில் கடந்த வாரம் கலவராக வெடித்தது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக உள்ளார்.

இந்த நிலையில், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய ஆடியோ ஒன்றை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியிட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் பொன்னையன் பேசும் தொலைபேசி உரையாடல் என்று அந்த ஆடியோ வெளியிடப்பட்டது.
 


அதில், தொண்டர்கள் எல்லாம் இரட்டை இலை பக்கமாகத்தான் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் நிற்கின்றனர். தங்கமணி அவரை காப்பாற்றிக் கொள்வதற்காக. ஸ்டாலினிடம் ஓடுகிறார். கே.பி.முனுசாமியும் இப்போது ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார்.

கட்சிக்குள் ஒரு குரூப் சாதி அடிப்படையில் வேலை செய்து கொண்டுள்ளனர். வேலுமணி, தங்கமணி கையில் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழியே இல்லை. கே.பி.முனுசாமி கூட ஒற்றைத் தலைமைக்கு வருவதற்கான முயற்சிகள் கூட நடந்தது, என பல தகவல்கள் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. வெளியான ஆடியோ போலியானது என பொன்னையன் மறுப்பு தெரிவித்தாலும், அவர் என்னிடம் பேசியது உண்மையென எதிர் பக்கத்தில் இருந்து பேசிய நாஞ்சில் கோலப்பன் கூறியுள்ளார்.  

இந்த நிலையில், சென்னை க்ரீன் வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், கழக சட்ட விதிப்படி இபிஎஸ் அணியினர் தன்னிச்சையாக அறிவித்த அறிவிப்புகள் எதுவுமே செல்லாது. எடப்பாடி அணியில் இருந்து பலரும் எங்களிடம் தொடர்பில் உள்ளனர். நேரம் வரும்போது நிறையபேர் இங்கு வருவார்கள், என்றார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், நேற்று பொன்னையன் ஆடியோ கேட்டு இருப்பீர்கள்; விரைவில் பல ஆடியோக்கள் வரும்.” என்றார். பொன்னையன் தொடர்பான ஆடியோ சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், அதுபோன்று இன்னும் பல ஆடியோக்கள் வெளியாகும் என்று ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன் நீக்கப்பட்டு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


newstm.in
 

Similar News