விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மேயர் பதவி?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மேயர் பதவி?

Update: 2022-03-02 10:22 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்படுவது உறுதி எனும் வகையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான வார்டுகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் மாமன்ற உறுப்பினர் பதவி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,  காங்கிரஸ் கமிட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யுனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டன.

பேச்சுவார்த்தை நிறைவுற்றதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,  விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு சில பகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளோம் என தெரிவித்தார்.

திமுகவின் கோட்பாடுகளுக்கு இணங்க நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்க பெற்றுள்ளது. எனவே விரைவில் முதல்வர் தலைமையில் அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறினார்.

ஏற்கனவே திருமாவளவன் ஒரு மேயர் பதவி மற்றும் 9 துணை மேயர் பதவிகள் திமுகவிடம் கேட்டுள்ளதாக கூறி இருந்தார். இந்நிலையில் கேட்ட இடங்கள் கிடைக்க பெற்றுள்ளதாக திருமாவளவன் கூறி இருப்பதன் மூலம் மேயர் பதவி உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவே கூறப்படுகிறது.

newstm.in

Similar News