மழையால் சென்னை தத்தளிப்பதை தடுக்க நடவடிக்கை.. 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் !!
மழையால் சென்னை தத்தளிப்பதை தடுக்க நடவடிக்கை.. 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் !!
பருவழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பருவமழைக் காலத்தில் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய வெள்ளத்தை சென்னை எதிர்கொண்டது.
இதனால், இந்த ஆண்டு பருவ மழையால் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மழை வெள்ள பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளநீரை அகற்ற மோட்டார் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் போன்ற பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
newstm.in