பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு.. பால் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை..!
பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு.. பால் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை..!
கர்நாடக மாநிலத்தில் 14 பால் கூட்டமைப்புகள் உள்ளன. இவற்றின் பால் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் வர்த்தகம் தற்போது 19 ஆயிரத்து 732 கோடி ரூபாயாக உள்ளது.
2 ஆண்டுகளில் அதன் வர்த்தகம் 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் இதன் வர்த்தகத்தை ரூ.25 ஆயிரம் கோடிக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பால் கூட்டைமைப்புகளை உள்ளடக்கி கர்நாடக பால் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நந்தினி என்ற பெயரில் பால் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சாதாரண பால் ஒரு லிட்டர் ரூ.37-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து பேசிய கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பாலச்சந்திர ஜார்கிகோளி, பால் உற்பத்தி செலவு அதிகரித்துவிட்ட காரணத்தால் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு மாநில அரசு அனுமதி வழங்கினால், கர்நாடகத்தில் ஒரு லிட்டர் பால் விலை ரூ.40 ஆக அதிகரிக்கும். அரசு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வில் 2 ரூபாய் பால் உற்பத்தியாளர்களுக்கும், ஒரு ரூபாயை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்க பால் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.