பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சரின் மகன் தலைமறைவு!!
பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சரின் மகன் தலைமறைவு!!
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநில அமைச்சரின் மகனை கைது செய்ய டெல்லி காவல்துறை ராஜஸ்தான் சென்றுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், அம்மாநில அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் மீது டெல்லியைச் சேர்ந்த 23 வயது பெண் பாலியல் புகார் தெரிவித்தார்.
இந்த வழக்கை டெல்லி சர்தார் பஜார் காவல்துறை விசாரித்து வருகிறது. புகார் அளித்த பெண்ணுக்கும் அமைச்சரின் மகன் ரோஹித்துக்கும் கடந்த வருடம் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் இருவருக்கும் இடையே உறவாக மாறி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பல முறை இருவரும் சந்தித்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரிடம் ரோஹித் பல முறை பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி வந்த ரோஹித் ஹோட்டலில் ரூம் புக் செய்து தன்னை கட்டாய பாலியல் உறவுக்கு ஆளாக்கி அதை செல்போனில் படம் பிடித்தார் என்றும், உணவில் மயக்க மருந்து கலந்து இந்த செயலில் ஈடுபட்டதாக அப்பெண் புகாரில் தெரிவித்தார்.
பின்னர் அமைச்சரின் மகன் தன்னை கைவிட்டுவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, அமைச்சரின் மகனை கைது செய்ய ராஜஸ்தான் விரைந்துள்ளது.
15 பேர் கொண்ட குழு ஜெய்பூரில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்திய நிலையில், அங்கிருந்து அமைச்சரின் மகன் தலைமறைவாகியுள்ளார்.